செய்திகள்

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு

புதுடெல்லி, அக்.9–

இஸ்ரேல் – பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் காரணமாக ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்குப் பின் உலக பொருளாதார நிலை சற்று தலை தூக்கிய போது, உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக உலக பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 600 நாட்களாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் நீடித்தும் வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது திடீரென பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் பெரும் யுத்தத்தை நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் மிகப் பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காஸா, மேற்கு கரையும் பேரழிவை எதிர்கொண்டுள்ளது.

இதனால் இஸ்ரேலுடன் வர்த்தகத்தை பெருமளவில் மேற்கொண்டு வரும் இந்தியா கடுமையான நெருக்கடியை சந்திக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள், பட்டை தீட்டப்படாத வைரங்கள் என பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தற்போதைய போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் இடையே ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 4 டாலர்கள் அதிகரித்துள்ளது. ஆசியா சந்தையில் தற்போது 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 88.76 டாலராக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *