செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளை விடுவிக்க குஜராத்துக்கு அதிகாரம் இல்லை

விடுதலையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காந்தி நகர், ஜன. 08–

பில்கிஸ் பானு வழக்கில் 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் விடுதலை குறித்து, குற்றம் நடந்த மராட்டிய மாநில அரசுதான் முடிவெடுக்க முடியும் என்றும் அவர்களை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவு செல்லாது என்றும் கூறி விடுதலையை9 உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2002 ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை, 30 பேர் கொண்ட காவி கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் பில்கிஸ் பானுவின் சிறுவயது மகள் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். அப்போது 19 வயது பெண்ணான பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் . பில்கிஸ் பானு மட்டுமின்றி அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோரும் அந்த கலவர கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.

11 பேரின் விடுதலை ரத்து

நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், தண்டனைக் காலம் முடியும் முன்பே நன்னடத்தை காரணமாக விடுதலை செய்வதாக கூறி குஜராத் அரசு 11 பேரையும் விடுதலை செய்தது. அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

மேலும் பெண்கள் மரியாதைக்குரியவர்கள், பெண்களின் மரியாதை முக்கியம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியம் என நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்கும் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *