சென்னை, அக்.21–
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இன்று நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது தி.மு.க. இளைஞரணி – மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். இதன்படி நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளது.
மேலும் நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, மாவட்டங்கள் தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளதாகவும் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து ஆவணங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.