சண்டிகர், பிப். 04–
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில், கடிதத்தில் தனது சொந்த காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளுக்காகவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் கடந்த 2021ல் பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டுவந்த நிலையில் தற்போது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் “தனது சொந்த காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளுக்காகவும் ராஜினாமா செய்வதாகவும், இதனை தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
திடீர் ராஜினாமா ஏன்?
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் பன்வாரிலால் புரோகித்துக்கும் மோதல் போக்கு நீட்டித்து வந்தது. புரோகித்துக்கு எதிரான வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்” என்றுகூறி எச்சரித்தது. இந்நிலையில் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்திருப்பது பஞ்சாப் அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த 1940-ம் ஆண்டு பிறந்த பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாட்டின் 14-வது ஆளுநராக 2017-ம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்றார். அதற்கு முன்பு அவர் அசாம் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் இருந்து 2 முறை காங்கிரஸ் சார்பாகவும், ஒருமுறை பாஜக சார்பாகவும் மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் பன்வாரிலால் புரோஹித். பாஜகவின் முக்கியத் தலைவராகவும் கருதப்பட்டவர்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பன்வாரிலால் புரோகித் நேற்று சந்தித்த நிலையில் இன்று ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.