சென்னை, பிப். 12–
‘‘நான் முதல்வன் திட்டம் இலக்கைத் தாண்டி 13 லட்சம் மாணவர்களுக்கு மேல் பயிற்சி அளித்துள்ளது.
கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களை உயர்சிறப்பு மையங்களாக: தரம் உயர்த்துவதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தொழில்துறை 4.0 தரநிலையை எய்துவதற்காக, தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து, 3,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் 2,877 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பாடத்திட்டங்களையும் கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதற்கான முன்னோடித் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்று கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை வழங்கிடும் உயரிய நோக்கத்துடன் தொலைநோக்குப் பார்வை கொண்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் தொடங்கினார். 2022-–23 ஆம் ஆண்டிலேயே, எதிர்பார்ப்புகளைத் தாண்டி, இத்திட்டம் 13 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, இலக்கைத் தாண்டியது.
2023–24ஆம் ஆண்டில், இத்திட்டம் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் 14 லட்சம் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. மேலும். இத்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு, 1.84 இலட்சம் விண்ணப்பதாரர்களில் 1.19 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றதன் வாயிலாக இத்திட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.