பெங்களூரு, ஜன. 8–
கர்நாடகத்தில் நடிகர் யஷ் பிறந்தநாளுக்கு கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானார்கள்.
கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் யஷ். கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றும் அழைக்கப்படும் நடிகர் யஷ்ஷுக்கு இன்று 38வது பிறந்தநாள். இதையொட்டி கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் தாலுகா சுரங்கி என்ற கிராமத்தில் ரசிகர்கள் அவருக்கு 25 அடி உயர கட் அவுட் தயார் செய்து இருந்தனர். 10க்கு மேற்பட்ட ரசிகர்கள் கட் அவுட்டை நிறுத்துவதற்காக தூக்கி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கட் அவுட் மின்சார வயரில் பட்டதில் மின்சாரம் பாய்ந்து ரசிகர்கள் அலறி துடித்தனர். இதில் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன் காஜி (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சிலர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து காயமடைந்த ரசிகர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் யஷ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.