சென்னை, ஏப்.2–
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளில் அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் (JCO/OR) சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்திக்கொள்ள சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரர்களை சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்திட ஏதுவாக, சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதிற்கு உட்பட்ட உடல் ஆரோக்கியமுள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் உடனடியாக சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டை முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை (தொலைபேசி எண்: 044-2235 0780) தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.