கோமதிக்கு இப்படி நேர்ந்திருக்கக் கூடாது. அவளை அத்தனை பேரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஒருவருக்கு கூட கோபம் வரவில்லை.
கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறான். இந்த மாதிரி பெண்கள் மனநிலை எப்படி இருக்கும். வீட்டில் இந்தக் குழந்தையை வைத்து என்ன செய்வார்கள்? கடவுளுக்கு கண்
இல்லையா ?
ஏன் இந்தப் பிறவி எல்லாம் படைத்து மனிதர்களை மனம் கோண வைக்கிறான் இறைவன் என்று பேசாத உதடுகள் இல்லை.
கோமதி இதற்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் கொஞ்சம் கூட வருத்தப்படாமல் தன் குழந்தையை எழுப்பினாள். அவளின மகன் எழாமல் இருந்தான்.
தம்பி எந்திரியா. ஸ்டாப் வந்துருச்சு. எந்திரி ….எந்திரி என்று அந்தப் பெண் எவ்வளவோ சாெல்லி எழுப்பி பார்த்தாள் பையன் எழவே இல்லை.
ஜன்னலில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் கோமதி கூப்பிடும்போது கையை விசும்பி விட்டு எழாமல் இருந்தான்.
பேருந்து நிறுத்தத்திற்கு சிறு தூரத்திற்கு முன்பே கோமதி எழுந்து தான் எழுப்பினாள். அவளின் மகன் அசையவே இல்லை. மூளை வளர்ச்சியற்ற குழந்தை என்பதால் பேருந்து பயணிகள் யாரும் அதைச் சட்டை செய்யவில்லை.
மாறாக கோமதியின் மீது தான் வருத்தப்பட்டார்கள். பரிதாபப்பட்டார்கள் . ஒரு குழந்தையைப் பெற்று இந்த அம்மா என்ன பாடுபடுதோ ? என்று அவள் மீது பரிதாபம் தான் பட்டார்களே ஒழிய யாரும் கோபப்படவில்லை.
பேருந்து நிறுத்தமும் வந்தது. கோமதி எழுப்பி எழுப்பிப் பார்த்தாள் . அவன் எழுவேயில்லை அருகில் அமர்ந்திருந்தவரும் எழுந்து கொண்டார் .
அலுவலக நேரம் என்பதால் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. இந்தப் பெண் தன் மகனோடு கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். கன்னத்தில் இரண்டு அறை விட்டு குழந்தையை எழுப்பிப் போகலாம் என்று கூட யாரும் சொல்லவில்லை. எல்லோரும் பேச்சற்ற சிலைகளாய் அமர்ந்திருந்தார்கள்.
படாத பாடுபட்டு எழுப்பி கைத் தாங்கலாக பிடித்துப் பேருந்தில் இருந்து இறக்கினாள் கோமதி.
அதுவரை பேருந்து நடத்துனர் ஓட்டுனர் கூட எதுவும் சத்தம் போடவில்லை.
ஒரு தாயின் கஷ்டம் அந்த குழந்தையை பெற்ற தாய்க்கு தான் தெரியும் . அவளின் மனது இந்த நிலையில் எந்த மாதிரியான வேதனை பட்டிருக்கும். எந்த மனநிலைக்கு தள்ளப்பட்டு இருப்பாள் அந்தத் தாய் என்றுதான் அங்கு அமர்ந்திருந்த பெண்கள் பேசிக்கொண்டார்கள்.
தாய் உண்மையில் தெய்வம் என்று ஒருவர் சொன்னார்.
தன் மகன் இவ்வளவு அடம் பிடித்து பயணிகளிடம் தனக்கு அவப்பெயர் வாங்கி கொடுத்து விட்டானே என்று எதுவும் நினைக்காமல் இப்படி ஒரு குழந்தையைப் பெற்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எந்தவிதமான அவமானமோ இல்லாமல் தன் குழந்தையை இறக்கிய கோமதி மகனின் முடியைத் திருத்தி கன்னத்தைத் தடவி கலைந்து கிடந்த சட்டையைச் சரி செய்து
வா மகனே என்று அவன் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றாள் கோமதி
இது அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் இவரல்லவோ தாய் .
தாய் தான் தெய்வம் என்று சொன்னார்கள். பேருந்து புறப்பட்டது .
அவள் வந்த பேருந்துப் பயணிகள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
கோமதி தன் மூளை வளர்ச்சியற்ற தன் மகனை அழைத்துக் கொண்டு சாலை வழியே நடந்த சென்று கொண்டிருந்தாள்.