டெல்லி, அக். 14–
ஆபரேசன் அஜய் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேர் உள்பட 235 பேருடன், இஸ்ரேலில் இருந்து 2 வது விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீன மக்கள் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தொடர்ந்து அங்கு தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஒன்றிய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
டெல்லி திரும்பிய 235 பேர்
ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் நேற்று தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய 212 இந்தியர்களில் 14 தமிழர்கள் சென்னை வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று இஸ்ரேலில் இருந்து 2-வது விமானம் டெல்லி வந்துள்ளது. அதில் 235 இந்தியர்கள் வந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேர் உள்ளனர். முதல் விமானத்தில் 212 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது விமானம் இந்தியா வந்துள்ளது.