செய்திகள்

தமிழிசை ராஜினாமா ஏற்பு; ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுடெல்லி, மார்ச் 19–

தெலங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததையடுத்து ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில், அவர் நேற்று தனது பதவிகளை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஜார்க்கண்ட் கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரி துணைநிலை கவர்னராகவும் கூடுதலாக பொறுப்புகளை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் தென்சென்னை அல்லது திருநெல்வேலி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *