சென்னை, அக். 5–
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழு வழக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் கிரா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தூக்கிட்டு தற்கொலை
இந்த நிலையில், வீட்டின் அறையில் நேற்று இரவு கிரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், கிராவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கிராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.