சென்னை, டிச. 11–
புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் மட்டும் இதுவரை 35,000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த வாரம் 2 நாட்கள் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் குப்பைகள் இழுத்து வரப்பட்டு ஆங்காங்கே சாலைகளில் தேங்கின. சென்னையில் தூய்மை பணியை மேற்கொள்ள திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து துப்புரவு பணியாளர்கள் தேவையான உபகரணங்களுடன் சென்னை வந்தனர். குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டனர்.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிந்துவிட்ட நிலையில் பல்வேறு இடங்களிலிருந்து இருந்து இழுத்தவரப்பட்ட குப்பைகள் மலைப்போல் சாலைகள் தேங்கியது. சுமார் 23 ஆயிரம் துப்புரவு ஊழியர்கள் 24 மணி நேரமும் உழைத்து சாலையில் இருந்த குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை அகற்றி வருகின்றனர். இந்த குப்பைகள் அனைத்தும் 20 கனரக வாகனங்கள் மற்றும் 12 டிப்பர் லாரிகள் மூலம் சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி கழிவுப்பொருள் கையாளும் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குகளுக்கும் அனுப்பப்பட்டன.
போர்க்கால நடவடிக்கையாக 5 நாட்களில் மலை போல குவிந்திருந்த 35,000 டன் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
கடந்த 6 முதல் 9ம் தேதி வரை சென்னையில் மட்டும் சுமார் 25,100 டன் குப்பைகள் மற்றும் 3,400 டன் மரங்கள் உள்ளிட்ட தாவர கழிவுகள் உள்பட 35,000 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயல் வெள்ளத்திற்கு பிறகு குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களின் தேக்க விகிதம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.