சென்னை, நவ.30–
யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-–
2,700 கி.மீ. அளவுக்கு புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன.
மழைநீர் வடிந்து செல்லும் அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை. தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே மழை நீர் தேங்கவில்லை என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறினார்.
நேற்று இரவு முழுவதும் முதலமைச்சர் தூங்கவே இல்லை. டிவியில் மழை பற்றிய செய்திகளையும், தனக்கு மழை பற்றி வரும் செய்திகளையும் கேட்டும், பார்த்துக் கொண்டும் உடனுக்குடன் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயருக்கு உத்தரவு பிறப்பித்து கொண்டிருந்தார்.
கடந்த முறை முதலமைச்சர் ரிப்பன் கட்டிடத்துக்கு வந்தபோது இடுப்பளவு தண்ணீர் இருந்தது. ஆனால் இன்று முதலமைச்சர் வந்தபோது இங்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை என்றும் பி.கே.சேகர் பாபு கூறினார்.