சென்னை, நவ. 16–
சென்னையில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, தற்போது ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராயர் நகர், கோபாலபுரம், கலைஞர் கருணாநிதி நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது. சென்னை கேகே நகரில் வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
20 இடங்களில் சோதனை
கோபாலபுரத்தில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான வினோத் கிருஷ்ணா என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் தியாகராயர் நகர் பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. பெங்களூரு, கொச்சியில் உள்ள வழக்குத் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.