ஒட்டாவா, ஜன. 11–
கனடாவில் விமானம் கிளம்பும் நேரத்தில் கதவை திறந்து பயணி கீழே குதித்த சம்பவம் சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ‛ஏர் கனடா’விற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.
விமானம் கிளம்பும் நேரத்தில் ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பாராத வகையில், விமானத்தின் கதவை திறந்து 20 அடி உயரத்தில் இருந்து குதித்தார். இது சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விமான ஊழியர்கள் உடனடியாக கீழே வந்து அந்த பயணியை பரிசோதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வாலிபரின் பெயர், மற்ற விவரங்களை வெளியிடாத போலீசார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. இதனால் துபாய்க்குச் செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.