செய்திகள்

காணாமல் போனது உலகின் 4 வது பெரிய கடல்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி

அஸ்தானா, பிப். 12–

உலகின் 4 வது பெரிய கடல் மாயமானனது தொடர்பாக ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ளது ‘ஆரல்’ எனும் கடல். இந்த கடல் பகுதியே இப்போது முழுமையாக வற்றி காணாமல் போயுள்ளது. 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த கடல் பகுதி 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால், ஆறுகள் திசைமாற்றப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கத் தொடங்கியது.

கடல் வற்றியது ஏன்?

1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசனத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது. இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன.

இதனால் உலகின் 4 வது பெரிய கடலாக இருந்த ஆரல் கடல் சிறுக சிறுக வற்றத் தொடங்கியது. 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு என்பது, ஏறத்தாழ தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் (தமிழ்நாட்டின் பரப்பளவு 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்) பாதிக்கும் மேலான பகுதி ஆகும். அத்தனை பெரிய கடலுக்கு வந்துகொண்டிருந்த ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி, பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *