மும்பை, ஜன. 27–
கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால், மகாராஷ்டிராவில் நடந்து வந்த மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கோரி, அதன் தலைவர் மனோஜ் ஜரங்கே போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த நவம்பரில் ஜல்னா மாவட்டம் அந்தர்வாலி சாரதி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், இந்த விவகாரத்தில் குடியரசு தினத்தன்று மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கப் போவதாக அறிவித்தார்.
கோரிக்கைகள் ஏற்பு
மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, அனைத்து மராத்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து மராத்தா சமூக மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குன்பி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். இது தொடர்பான அவசர சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலத்தில் பதற்றம் நிலவியது. இந்நிலையில், கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதால், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதனால் நிலவி வந்த பதற்றம் தணிந்தது.