செய்திகள்

ஐ.நா அவை எங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை: ஜெய்சங்கர் கண்டனம்

டெல்லி, ஏப். 05–

ஐ.நா அவை எங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த சோரன் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகியவற்றை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், இந்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தன.

ஐநா கண்டனம்

இதற்கு, இந்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்தியா நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு பாஜக அரசு சம்மன் அனுப்பியது. இந் நிலையில், ஐ.நா சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “இந்தியாவில் மட்டுமின்றி, தேர்தல் நடைபெறும் எந்த நாட்டிலும், அரசியல் மற்றும் அனைவரின் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான, நியாயமான சூழ்நிலையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று கூறினார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “எங்களுடைய தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எங்களுக்கு சொல்ல தேவையில்லை. இந்திய மக்கள் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வார்கள். எனவே, அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *