பதிலடி கொடுப்போம் என செலென்ஸ்கி ஆவேசம்
கீவ், டிச. 30–
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
ரஷ்யா–உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள மிகத் தீவிரமான ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல்முறை என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்தாகவும், 132 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதிலடி கொடுப்போம்
இது குறித்து சமூக ஊடகத்தில் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் செலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 110 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அனைத்து ரகங்களையும் சேர்ந்த ஆயுதங்களையும் ரஷ்யா பயன்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மகப்பேறு மருத்துவமனைப் பிரிவு, கல்விக் கூடங்கள், ஒரு வணிக வளாகம், அடுக்குமாடிக் குடியிருப்புகள், இல்லங்கள், வா்த்தகக் கிடங்கு, வாகனம் நிறுத்துமிடம் என்று பல்வேறு இடங்கள் ரஷ்யாவால் குறிவைக்கப்பட்டது.
இந்த ‘பயங்கரவாதத்’ தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம். உக்ரைனின் ஒவ்வொரு நகரத்தையும், ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதற்காக தொடா்ந்து போரிடுவோம். இந்தப் போரில் ரஷ்யா தோல்வியடைவது உறுதி என்று செலன்ஸ்கி கூறியுள்ளார்.