கேப் டவுன், டிச. 30–
இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தைச் செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.
இஸ்ரேல் அடாவடியாக, காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையே நடைபெற்று வரும் இந்தப் போரின் நோக்கம் காசாவிலுள்ள பாலஸ்தீன மக்களை அழிப்பதுதான் எனத் தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
தென்னாப்ரிக்கா வழக்கு
காசாவில் இஸ்ரேல் பல போர் குற்றங்களை நிகழ்த்துவதாக பல்வேறு தரப்புகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், பன்னாட்டு நீதிமன்றத்தில் தென்னாப்ரிக்கா இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. பொதுமக்களைப் பாதுகாக்குமாறு அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், காசாவில் இதுவரை 21,500-க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் அப்பாவி பாலஸ்தீனர்கள் மட்டுமல்லாமல், ஹமாஸ் அமைப்பால் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். சொந்த நாட்டு மக்களையே தாக்குதலில் கொன்ற போதும், போரை நிறுத்தாமல் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.