செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடும் கண்டனம்

டெல் அவிவ், ஏப். 14–

இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேயான போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதனால் கோபம் அடைந்த ஈரான் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது. இதனால், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதட்டம் நிலவி வந்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால், மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை தத்தம் நாட்டு மக்களுக்கு விடுத்தன.

அதிகாலை தாக்குதல்

இந்த நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடி தாக்குதலாக இதுவாகும்.

100-க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டிற்கு மேலே அடுக்கடுக்காக டிரோன்கள் பறந்ததாக ஈராக் மற்றும் ஜோர்டானும் தெரிவித்துள்ளன.

ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல், இஸ்ரேலை நோக்கி சென்ற டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோ பிடன் கண்டனம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோ பிடன் கூறியதாவது:-

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்காவின் உதவியால் ஈரானின் டிரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் வீழ்த்தியது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் இரும்புக்கவச பாதுகாப்பை உறுதிப்படுத்த நெதன்யாகுவுடன் பேசினேன். தாக்குதல்களை உன்னிப்பாக கவனிக்கிறோம். மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றார்.

மேலும், போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவசர ஆலோசனையையும் ஜோ பிடன் மேற்கொண்டுள்ளார்.

ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் சபை அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *