சிவகங்கை, ஜன. 16–
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் சிவகங்கை மாவட்டதில் உள்ள தனது சொந்த கிராமத்தில் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார்.
விவசாயத்திற்கும், கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு உற்ற துணையாகத் திகழும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் மாடுகளை குளிப்பாட்டியும், கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்தும் அலங்கரித்தனர். பின்னர் கரும்பு, மஞ்சள், காய்கறிகள் வைத்து, குடும்பம், குடும்பமாக மாட்டுப் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மாட்டுப் பொங்கல் விழாவை தனது பூர்வீக கிராமத்தில் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கொண்டாடி மகிழ்ந்தார்.
ஆளுநர் பொங்கல்விழா
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரம் கத்தப்பட்டு கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் தனது கிராமத்தில் தனக்கு சொந்தமாக சிறந்த 10 ஜல்லிக்கட்டு காளைகளுடன் பொங்கல் வைத்து மாடுகளுக்கு உணவளித்து அப்பகுதி மக்களுடன் கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததாவது:–
‘இலங்கை சென்ற தமிழர்கள் தங்களது உடைகளையும், கலாச்சாரங்களை மட்டுமே அப்போது எடுத்துச் சென்றனர். தமிழர்களின் பண்பாட்டை இலங்கையில், நமது தமிழர்கள் வளர்த்தும், அதனை பாதுகாத்தும் வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை சர்வதேச போட்டியாக மாற்றும் முயற்சியாகவே இந்த ஆண்டு இலங்கையில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது’ என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.