டெல்லி, அக். 4–
மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரண்டு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
நீளும் விசாரணை
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்தது. ஏற்கெனவே, டெல்லி மதுபான கொள்கை புகாரில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் தொடர்பு குறித்து அமலாக்கத் துறை விசாரணை, சோதனைகள் மேற்கொண்டது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை தனது விசாரணை வளையத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள துணை முதல்வர் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று விசாரணை செய்யப்படவுள்ள சூழலில், இந்த சோதனை நடைபெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.