முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை, ஜன.14-–
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்’ என்று பதில் அளித்திருந்தார். இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் துணை முதலமைச்சர் பதவி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எழுச்சிமிகுந்த இளைஞர் அணி மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வர தயாராகியுள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாக பரப்பி வாழ்க்கை பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களை பரப்பிப் பார்த்தனர்.
அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்ற வதந்தியை பரப்பத்தொடங்கினர். அதற்கு அமைச்சர் உதயநிதி, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.
இளைஞர் அணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தை திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் தி.மு.க.வினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம்.
மாநில உரிமைகளை காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தை செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.
கட்சி தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு தொண்டர்களின் உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதலமைச்சர் என்கிற பொறுப்பு தொண்டர்களின் அயராத உழைப்பிலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும்.
நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும், அன்போடும் கட்டளையிடுவது, திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.