சென்னை, ஏப்.16–
தென்சென்னை மக்களவைத் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், ‘அக்கா 1825’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாள்தோறும் மக்கள் பணி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்று கணக்கிட்டு 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் இந்த தேர்தல் அறிக்கையை தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்து நெரிசல் போன்ற தென் சென்னையின் முக்கிய பிரச்னைகள் குறித்து அலசி, அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் அதில் உறுதிமொழி அளித்துள்ளார்.
தமிழிசை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சென்னைக்கு கோதாவரி ஆற்றுநீரை கொண்டுவர நடவடிக்கை, பெரும்பாக்கம், சித்தாலபாக்கம் உள்ளிட்ட இடங்கள் உள்பட மொத்தம் 25 நீர்நிலைகள் தூர்வாரப்படும்.
மெட்ரோ ரெயில்–-2 திட்டப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடபழனி, திருவான்மியூர், தி.நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
ரெயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.
சைதாப்பேட்டை, மாம்பலம் ரெயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும். நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும்.
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் பிரதமரின் காப்பீட்டு திட்டம் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.