அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்கள் விற்பனை
சென்னை, மே 22–
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பப்பட்டதன் எதிரொலியாக யூடியூபர் டிடிஎப் வாசன் கடைக்கு போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎப் வாசன் கடந்த வருடம் சென்னை- – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டிடிஎப் வாசனின் இருசக்கர வாகன கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.