சென்னை, டிச. 11–
வெள்ள நிவாரண நிதியை பணமாக வழங்காமல் வங்கிக் கணக்கில் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதைதொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மிழக அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டக்குரியது எனவும் அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டுமென கோரியுள்ளார். ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதோடு நியாயமாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு,நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில் இந்த பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்த வித சிரமும் இருக்காது என கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.