அயோத்தி, பிப். 17–
அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலில் நாள்தோறும் பிற்பகலில் ஒரு மணி நேரம் நடை அடைக்கப்படும் எனத் தலைமைப் பூஜாரி சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் மூலவர் ஸ்ரீ பாலராமர் சிலை கடந்த மாதம் 22ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்ற கோலாகல பிரதிஷ்டை நிகழ்வைத் தொடர்ந்து, 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இடையில் 2 மணி நேரம் நடை அடைக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கோவில் நடை அடைப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறியதாவது:–-
அயோத்தி ராமர் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, தினமும் ஒரு மணி நேரம் மட்டும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது என தெரிவித்தார்.