புதுடெல்லி, ஜன. 25–
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1–ந்தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மத்தியில் ஆளும் மோடி அரசு தனது 2வது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இடம் பெறும் ஜனாதிபதி உரையில் அரசின் சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை இடம் பெறும் என்று தெரிகிறது.
பட்ஜெட் தயாரிப்பு டிஜிட்டல் முறைக்கு மாறினாலும் பழங்கால வழக்கப்படி பட்ஜெட்டை தயாரிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கும் சம்பிரதாயம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நேற்று அல்வா தயாரிக்கப்பட்டு அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பட்ஜெட் தயாரிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகமே அல்வா கிண்டும் விழா கருதப்படுகிறது. மத்திய பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் தற்காலிகமாக தனிமைப்படுத்துவார்கள். ஏனெனில் பட்ஜெட்டிலில் உள்ள சிறப்பம்சங்கள் கசிந்து விடக்கூடாது என்பதற்காக வெளி உலக தொடர்பை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.