செய்திகள்

நாளை ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடக்கம்

கோலாகல கொண்டாட்டத்திற்கு தயாராகும் சேப்பாக்கம் மைதானம்

சென்னை, மார்ச் 21–

நாளை ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ளதைத் தொடர்ந்து துவக்கி விழா நிகழ்ச்சிக்காக சேப்பாக்கம் மைதானம் தயாராகி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் திருவிழா கொண்டாட்டம் போல் இருக்கும்.

இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகள் மோதுகிறது.இதற்காக ஆர்சிபி அணியினர் இன்று சென்னை வந்தடைந்தனர். ஏற்கனவே சிஎஸ்கே அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அணியின் பெயர், லோகோ மற்றும் ஜெர்சி என்று அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் கடந்த 18ம் தேதி ஆன்லைனில் விற்கப்பட்டது. இதில் பெரும்பாலான ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருப்பதால் அதற்கான வேலைகள் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. துவக்க நிகழ்ச்சிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 1 மணி நேரம் வரை நடைபெறவுள்ள துவக்க விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மாலை 6.30 மணி முதல் 7.30 வரை நடக்கும் தொடக்க விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனம் இடம்பெறுகிறது. இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் ஆகியோர் பங்கேற்கவுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *