செய்திகள்

நாடாளுமன்ற தாக்குதல் 22ம் ஆண்டு நினைவு தினம்: மோடி, சோனியா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி, டிச. 13–

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22ம் ஆண்டு நினைவு நாளான இன்று அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அனைத்துகட்சி எம்.பி.க்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி லக்ஷர்–ஏ–தொய்பா, ஜெய்ஷ்–ஏ–முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 5 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் டெல்லி போலீசார் 5 பேர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த பெண் ஒருவர், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளர்கள் 2 பேர் மற்றும் செய்தியாளர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தின்போது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதை அடுத்து, நிகழ இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்று இன்று 22ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களின் படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரதீய ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஆகியோர் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *