சென்னை, நவ.1–
தீபாவளி அன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருகிற நவம்பர் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது.
இதையொட்டி இந்த ஆண்டும் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுபடி, பசுமைப் பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.