புதுடெல்லி, அக்.11-–
தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் ஆ.ராசா. மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.
இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே பணமோசடி தடுப்புச்சட்டம் 2002 விதிகளின் கீழ் ஆ.ராசாவுக்கு சொந்தமான கோவையில் உள்ள 15 அசையா சொத்துகளை, பினாமி நிறுவனமான ‘கோவை ஷெல்டர்ஸ் புரோமோட்டர்ஸ் என்ற பெயரில் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இதன் மதிப்பு ரூ.55 கோடி ஆகும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தற்காலிக இணைப்பு உத்தரவை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு உள்ளது.