திருப்பத்தூர், ஜன. 4–
தியான வகுப்புக்கு மோட்டார் சைக்களில் சென்ற 2 இளைஞர்கள் அரசுப் பேருந்தில் மோதிய விபத்தில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.
திருப்பத்தூர் அடுத்த முல்லை பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் பிரவீன் குமார் (வயது 27), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்குமார் (வயது 24) ஆகிய இருவரும் திருப்பத்தூரில் உள்ள தியான வகுப்புக்கு நாள்தோறும் மோட்டார்சைக்களில் சென்று வருவது வழக்கம்.
2 பேரும் பலி
இந்த நிலையில், தியான வகுப்புக்கு இன்று காலை மோட்டார்சைக்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆலங்காயம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் முன்பு சென்றதால், அதை முந்தி செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் தலை நசுங்கி இளைஞர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குருசிலாப்பட்டு போலீசார், 2 பேரின் உடலையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.