ஒரு சாதாரண குடும்பம். 4 பெண் குழந்தைகள். 3 பெண் குழந்தைகளின் திருமணத்தை முடித்து விட்டார் அந்த குடும்பத் தலைவர். 4வது பெண் சிவகாமிக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்ணில் பட்டவர் தான் தங்கராஜ்.
அவன் அதிகம் படித்தவன் அல்ல. ஆனால் கடும் உழைப்பாளி. தினமும் 1000 ரூபாய் சம்பாதித்து விடுவான். அவனுக்கு தெரியாத வேலையே இல்லை எனலாம். பிளம்பர் வேலை, வீட்டிற்கு வர்ணம் அடிப்பது, மரம் வெட்டுவது என்ற அத்தனை வேலையும் செய்வான். அவனுக்குத்தன் கடைசி மகள் சிவகாமியை பேசி முடித்தார் சிவகாமியின் அப்பா.
தங்கராஜ் நல்ல வரனாகத்தான் இருந்தான். சம்பாதித்த காசு அனைத்தையும் சிவகாமியிடமே கொடுத்தான்.
சிவகாமியும் இதனிடையே கணினி போன்ற சில படிப்புகளையும் கருத்தாகப் படித்தாள். சுகமாகவே குடும்பம் போனது. மகேஷ் என்ற பையனும் பிறந்தான். திடீரென தங்கராஜின் நட்பு வட்டாரம் மாறியது.
நண்பர்கள் மாறியதும் குடிப்பழக்கம் போன்ற கெட்டப் பழக்கங்களும் சேர்ந்து கொண்டன. சிவகாமியும் அவனுக்கு புத்திமதிகள் சொன்னாள். எதுவுமே அவன் நடத்தையை மாற்றவில்லை. இப்படியே போனால் நம்மால் மகேஷை நல்ல முறையில் வளர்க்க முடியாது. என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
எதிர்பாராத விதமாக ஒரு விளம்பரம் ஒன்றை செய்தித் தாளில் பார்த்தாள். அதில் ஒரு வேலைக்கு ஆள் தேவை. ஆனால் வீட்டோடு தங்கி வேலை செய் வேண்டும் என்று கூறினாள்.
அதற்கு சம்மதம் தெரிவித்து பதில் எழுதினாள். ஆனால் என் மகனுக்கு நல்ல பள்ளியில் சேர்த்து அவனுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். அதற்கு சம்மதம் கொடுத்தது அந்த வடஇந்திய குடும்பம். திடீரென ஒரு நாள் சிவகாமி கிளம்பி விட்டாள். மகேஷ் அவளுடன் சென்றான். அந்த குடும்பம் சிவகாமியை நல்லமுறையில் கவனித்து கொண்டது. மகேஷையும் உயர்தர பள்ளியிலேயே சேர்த்து விட்டாள். அவனும் நல்லமுறையில் படித்து முன்னேறிக் கொண்டான்.
தங்கராஜ் அவனும் தைரியமாகத் தான் இருந்தான். அவன் கெட்ட பழக்கங்களை அவனை சீர்குலைக்க ஆரம்பித்து விட்டன. நண்பர்களும் அவனை கை விட்டனர். தங்கராஜ் உடல்நிலை மோசமாக ஆரம்பித்ததும் தேசாந்திரி போல் ஊரெல்லாம் சுற்றினான். கடைசியில் இமயமலை பகுதிக்கு சென்றான். அங்கே ஒரு தமிழ் தெரிந்த ஒரு ரிஷியைக் கண்டான். அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தான். அவரும் தங்கராஜை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார்.
ஒரு நாள் தங்கராஜ், அய்யா நான் மிகவும் மூர்க்கமாக இருந்தேன். அதனை போக்கும் வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றான்.
சீடனே, நீ ஒரு வேலை உணவை குறைத்துக் கொள் என்றார் ரிஷி. கடைப்பிடித்தான் தங்கராஜ். அவனுக்கே வித்தியாசம் தெரிந்தது. பிறகு ஒரு வேளை மட்டும் உணவை சாப்பிட்டான். நல்ல நெறியாளனாக மாறினான். தற்செயலாக ஒரு பத்திரிகையில் ஒரு செய்தியைப் பார்த்தான். மகேஷ் என்ற கலெக்டர் ஒரு மாவட்டத்தில் சுதந்திர தின கொடியேற்றுவதைப் பார்த்தான். உடனே அவனுக்கு தன் மகன் நினைவு வந்தது. இதைத் தன் குருவிடம் சொன்னான். உனக்கு உன் குடும்ப நினைவு வந்து விட்டது. நீ போய் அவர்களை பார்த்து வா என்று கூறினார். அது எந்த மாவட்டம் என்பதையும் விசாரித்து அனுப்பி வைத்தார்.
தேடித்தேடி கடைசியில் அந்த ஊர் மாவட்ட கலெக்டர் வீட்டின் முன் வந்தான். அப்போது பெண் வெளியே வந்து என்ன வேண்டும் என்று கேட்டாள். தங்கராஜால் பதில் சொல்ல முடியவில்லை. சிவகாமி புரிந்து கொண்டாலும் அவனை வெறுக்கவுமில்லை. அவன் வரவை விரும்பவுமில்லை. அனிச்ச மலராக நின்றாள். சற்று இருப்பா என்று கூறி உணவையும் பழங்களையும் கொடுத்தாள். அப்போது மகேஷ் கலெக்டர் வெளியே வந்து தன் காரில் ஏறினான்.
தன் மகனைப் பார்த்து பிரமித்து விட்டான். தன்னுடன் இருந்தால் இந்நிலை நிச்சயம் வராது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். தான் ஊர் கோடியில் உள்ள நந்தவனத்தில் தங்கியிருப்பதாகச் சொன்னான். அப்போது சற்று தள்ளி இருந்து மகனை கண் கொள்ளாமல் பார்ப்பான். அப்போது சிவகாமியும் அவனுக்கு உணவைக் கொடுப்பாள்.
ஒரு நாள் ஆள் யாரோ ஒருவர் ஊரை விட்டு வெளியே உள்ள நந்தவனத்தில் ஒரு அனாதை இறந்து கிடக்கிறார் என்றான். சிவகாமிக்குப் புரிந்து கொண்டு தன் கணவன் என்று. மகேஷை உடனே வரச் சொன்னாள். மகனே நீ இன்று ஒருவருக்கு ஈமக்கடன் செய்ய வேண்டும் என்றாள். உடனே சரியென்று உடைகளை மாற்றி அந்த இடத்திற்கு வந்தான். ஈமக்கடனை செய்தவுடன் அவர் யார் அம்மா என்று கேட்டான். அவர் உனக்கு சொந்தமுமில்லை. பந்தமுமில்லை. நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. நீ இந்த மாவட்ட கலெக்டர் மட்டும் அல்ல தந்தை போல் உள்ளவன். இந்த மனிதனுக்கு ஈமக்கிரியை செய்வது உன் கடமை அதையே செய்யச் சொன்னேன் என்று சிவகாமி ஞானக்கொழுந்தாகச் சொன்னாள்.
சரி அம்மா என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஆற்றில் இருவரும் குளித்து விட்டு மன நிறைவோடு வெளியேறி வந்தனர்.
#சிறுகதை
ஞானக்கொழுந்து வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட கதை. மகன் மாவட்ட ஆட்சியர் என்பதால் அந்த பதவி மூலமாக கணவரின் உடலுக்கு சிதை மூட்டிய விஷயம் அருமை அருமை