சென்னை, ஜூன் 29–
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரனுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியிருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
ஹேமந்த் சோரன் அவர்களே வருக! சரியாக 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது என்பது எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. அரசு அரங்கேற்றிய அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர் ஒருவரின் முதலமைச்சர் பதவியைப் பறித்தனர், அவரை 5 மாதங்கள் சிறையில் அடைத்து வதைத்தனர், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள விடாமல் தடுத்தனர்.
இந்நிலையில், அவருக்குப் பிணை வழங்கியுள்ள நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். ஹேமந்த் சோரனின் மன உறுதியையும், ஜார்க்கண்ட் மக்கள் மீது அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.