மும்பை, ஜன. 01–
சீனாவுக்காக உளவு பார்த்ததாக 8 மாதங்களுக்கு முன் பிடிக்கப்பட்ட புறா விடுவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் மும்பை புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் ஆர்சிஎஃப் போலீசாரால் புறா பிடிக்கப்பட்டது. புறாவின் காலில் இரண்டு மோதிரங்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் ஒன்று செம்பு மற்றும் மற்றொன்று அலுமினியம் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதன் இரு இறக்கைகளுக்கும் கீழே, சீன மொழியைப் போன்ற ஸ்கிரிப்ட்டில் செய்திகள் எழுதப்படிருந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர்.
விடுவிக்கப்பட்ட புறா
இதற்குப் பிறகு, ஆர்சிஎஃப் போலீசார் புறா மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் முழுமையான விசாரணை முடிந்ததும், உளவு பார்த்த குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. விசாரணையில், தைவானில் திறந்த நீர் பந்தயத்தில் புறா பங்கேற்றது, போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில், வழிமாறி இந்த புறா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவை அடைந்துள்ளதும் தெரியவந்தது.
அதன் பின் இங்குள்ள பரேல் பகுதியில் உள்ள விலங்குகளுக்கான பாய் சகர்பாய் டின்ஷா பெட்டிட் மருத்துவமனை, புறாவை விடுவிக்க போலீசாரிடம் அனுமதி கோரியதாக ஆர்சிஎஃப் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அனுமதி அளித்த நிலையில் புறா விடுவிக்கப்பட்டது.