கேங்டாக், அக். 5–
சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்த நிலையில், ராணுவ வீரர்கள் உள்பட 102 பேர் மாயமாகி உள்ளனர்.
வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியின் மீது நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இந்திய இராணுவ வீரர்கள் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியானது.
14 பேர் பலி
தற்பொழுது, இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாகவும், 23 இராணுவ வீரர்கள் உட்பட 102 பேர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3,000 சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளில் சிக்கித் தவிப்பதாக, சிக்கிம் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிக்கிம் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த வெள்ளப்பெருக்கினால் என்எச்-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கியதால், அதிக உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அது ஒரு பக்கம் இருக்க, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல குழுக்களாக பிரிந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.