செய்திகள்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகர் இருக்கை முற்றுகை

அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

சென்னை, அக். 11–

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கும்படி இதுவரை 10 முறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், எங்களது கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “இருக்கை ஒதுக்கீடு என்பது எனது தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை. பதவி நீக்கம் தொடர்பான கோரிக்கையை ஏற்க முடியாது. உறுப்பினர்கள் எந்த கட்சியின் சின்னத்தில் வெற்றி பெற்று அவைக்கு வந்தார்களோ, அவர்களை அந்த கட்சியின் உறுப்பினர்களாகத்தான் நான் பார்ப்பேன்” என்றார்.

இதையடுத்து, அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கூச்சலில் ஈடுபட்டதால், அண்ணா தி.மு.க. உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாயநாகர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் கருத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு அண்ணா தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *