செய்திகள்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்

ராமேஸ்வரம், நவ. 27–

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அகதிகளாக இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இவ்வாறான நிலையில் வாழ்வாதாரம் தேடி ஏராளமானோர் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், தலைமன்னார் பகுதியில் இருந்து குடும்பம், குடும்பமாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து படகுகளில் தனுஷ்கோடி, அரிச்சல் முனை கடற்கரை பகுதிக்கு வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 அகதிகள் வந்துள்ளதாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் 7 அகதிகளையும் மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் தொல்புறத்தை சேர்ந்த நாகராஜ் (43), இவரது மனைவி வந்தினி (38) மற்றும் அனோ ஜன்ண (13), கஜிவன் (9), தனுஷ்கா (4), அஜந்தன் (18), கிசாலினி (17) ஆகியோர் படகுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தாக தெரிவித்தனர்.

மேலும் அங்கு வாழ்வதற்கான உகந்த சூழல் இல்லை என்றும், பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர். விசாரணைக்கு பின்னர் 7 அகதிகளையும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *