சென்னை, நவ. 20–
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. பின்னர், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், அடிக்கடி உடல்சோர்வு, படபடப்பு ஏற்படுவதால் சிறையில் அவ்வப்போது அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.
புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு இருதய பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
பின்னர், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர்.அங்கு, செந்தில் பாலாஜியின் மூளை நரம்பில் உள்ள சிறிய அளவிலான ரத்தக்கட்டியை கரைக்க 2 நாட்களாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நெஞ்சகவியல் நிபுணர்கள் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இதை தவிர கழுத்தின் பின்பகுதி சவ்வில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யவும் ஓமந்தூரார் பன்னேக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.