செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை

ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை, ஜூன்.8-–

அண்ணா தி.மு.க –பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது. வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும். தேர்தல் என்றால் வெற்றி, தோல்வி சகஜம். தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி அண்ணா தி.மு.க.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று தமிழகத்தை ஆளும் கட்சியாக மாறும். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு புள்ளிராஜாவாக (புள்ளி விவரம் பேசுபவர்) மாறிவிட்டார். ஒரு அரசியல் கட்சி தலைவராக இல்லாமல், புள்ளி விவரம் சொல்லும் ஐ.பி.எஸ். அதிகாரியாக உள்ளார். அவருக்கு அண்ணா தி.மு.க., குறித்து பேச எந்த முகாந்திரமும் கிடையாது.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. தனித்து நின்றது. அப்போது, பா.ஜ.க. இப்போது உள்ள கூட்டணியுடன்தான் போட்டியிட்டது. இவர்கள் அப்போது பெற்ற வாக்குகளை விட தற்போது குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளனர். இதுகுறித்து அண்ணாமலை பேச மறுப்பது ஏன்?. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடியை 8 முறை தமிழகத்துக்கு அழைத்து வந்தார்கள். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.

வெற்றி குவிப்போம்

அண்ணா தி.மு.க. டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை கூறுகிறார். 30 ஆண்டுகள் பல வெற்றிகளை குவித்தோம். இனி வரும் தேர்தல்களில் வெற்றியை குவிப்போம். இந்த தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் பா.ஜ.க.வின் மதவாதம், இனவாத அரசியல் எடுபடவில்லை. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் தோல்வி அடைந்துள்ளனர். அங்கேயே வெற்றி பெறாதவர்கள், தமிழகத்தில் எப்படி வெற்றி பெறுவார்கள்?.

பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இது திராவிட அரசியல் மண். இங்கு, திராவிட இயக்கங்கள்தான் இருக்கும். அண்ணா தி.மு.க. – தி.மு.க. மட்டும்தான். பா.ஜ.க.வை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

அண்ணா தி.மு.க – பா.ஜனதா இடையே கூட்டணி எப்போதும் கிடையாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது. முன்னாள் அமைச்சர் வேலுமணி அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக அனுமானத்தின் அடிப்படையில் பேசினார். அவர் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது.

அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே முரண்பாடு இருப்பதுபோல் தெரிவது அவர்களின் உட்கட்சி விவகாரம். அண்ணா தி.மு.க.வில் இனி ஒற்றை தலைமைதான். ஒன்றிணைவோம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

சொத்து வரி, மின்கட்டண உயர்வு உள்பட பல்வேறு கட்டணங்களை உயர்த்திய தி.மு.க.வுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.

வாக்களிக்கும்போது மக்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியின் மீதான அதிருப்தி காரணமாக மக்கள் 2026-ல் அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றும் என்பது நடக்காத விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *