செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை: வங்கக்கடலில் 25ம் தேதி உருவாகிறது ரீமால் புயல்

கடலூரில் 20 செ.மீ. மழை பதிவு

கன்னியாகுமரியில் 13 வீடுகள் இடிந்தது

புதுடெல்லி, மே 23–

வங்கக்கடலில் வரும் 25ம் தேதி ரீமால் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக – தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு உருவானது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வருகிற 25ந் தேதி முதல் 28ந் தேதி வரை மிதமான பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது.

இது வடகிழக்கு திசையில் நகா்ந்து வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று 25ந் தேதி புயலாக உருவெடுக்கும். இந்த புயல் 26ம் தேதி மாலை தீவிர புயலாக மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாடு பரிந்துரைப்படி இந்த புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புயல் வடக்குப்பகுதியில் நகரும்போது தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.

வெப்பம் குறைந்தது

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. வங்கக் கடலில் புயல் உருவானாலும் அது வடக்கு நோக்கி நகர நகர தமிழகத்தில் வெப்பநிலை உயரும். அதாவது இன்று முதல் மே 26-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. நேற்றைய நிலவரப்படி ஈரோட்டில் அதிகபட்சமாக 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சென்னையில் நேற்று புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதற்கிடையே குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் 20 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

காட்டுமன்னார்கோவில் – 18 செ.மீ., விழுப்புரம் – 17 செ.மீ., மயிலாடி – 14 செ.மீ., லக்கூர், தொழுதூர் – தலா 13 செ.மீ., குண்டேரிப்பள்ளம், வால்பாறை தாலுக்கா அலுவலகம் – தலா 12 செ.மீ., தம்மம்பட்டி – 12 செ.மீ., வால்பாறை, கொடநாடு தலா 11 செ.மீ., அவிநாசி, கோபிசெட்டிப்பாளையம் தலா 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரியில்

விடிய,விடிய மழை தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் மாவட்ட முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

கொட்டாரம், கன்னியாகுமரி, மயிலாடி, சாமிதோப்பு, அஞ்சுகிராமம் பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது இன்று காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 8 மணி நேரம் பெய்தது. அதன் பிறகும் காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

மாவட்டத்தில் அதிகபட்ச மழை மயிலாடியில் 14 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கனமழையின் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை, திருவட்டார், குளச்சல், சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணை பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

13 வீடுகள் இடிந்தது

தொடர் மழை காரணமாக இதுவரை 13 வீடுகள் இடிந்துள்ளது. கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன்கோணம், தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதிகளில் ரப்பர் பால் மற்றும் செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

#HEAVYRAINS #Cyclone #TN

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *