செய்திகள்

வெறுப்பு, வன்முறை சித்தாந்தமே காந்தியின் உயிரை பறித்துச் சென்றது: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

மகாத்மா காந்தியின் 76 வது நினைவு நாள்

டெல்லி, ஜன. 30–

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், வெறுப்பு மற்றும் வன்முறை சித்தாந்தம்தான் காந்தியை இதேநாளில் நம்மிடம் இருந்து பறித்துச் சென்றதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர் மகாத்மா காந்தி. இவர் டெல்லி பிர்லா மாளிகையில் இந்துத்துவ வெறியனான ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துக்க நாளாக அமைந்தது. அதையொட்டி, அன்றைய தினம் ஒவ்வோர் ஆண்டும் நினைவு கொள்ளப்படுகிறது. அன்றைய தினமே இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

வெறுப்பு, வன்முறை சித்தாந்தம்

அந்தவகையில், மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:–

‘வெறுப்பு மற்றும் வன்முறை சித்தாந்தம்தான் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது. அதே வெறுப்பு சித்தாந்தம் காந்தியின் கொள்கைகள், லட்சியங்களை நம்மிடமிருந்து பறிக்க இன்றும் முயல்கிறது. வெறுப்பு என்னும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது. இதுவே மகாத்மா காந்திக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்’ என, ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *