கீவ், நவ. 7–
உக்ரைனில் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்தில், ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.
உக்ரைன் நாட்டின் ஸபோரிஷியா பகுதியில் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரஷ்யா வீசிய ஏவுகணைத் தாக்குதலில் 19 உக்ரைன் ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய துயரச் சம்பவம் என்று அதிபர் வொலோடிமீர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
போர்க் காலத்தில், பாதுகாப்புப் படையினர் பெரும் கூட்டமாகக் கூடும் இத்தகைய நிகழ்ச்சி போர் முனைக்கு அருகே நடைபெற்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ருஸ்தம் உமெரொவ் கூறி உள்ளார். இதற்கிடையே, உக்ரைனின் ஒடெஸா பகுதியிலும் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 8 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தங்களது கப்பல் சேதமடைந்ததாக ரஷ்யாவும் கூறியுள்ளது. தங்கள் நாட்டைச் சோந்த ஸாலிவ் துறைமுகத்தைக் குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகளை வீசியதாகவும், இதில் ஒரு கப்பல் மிதமாக சேதமடைந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.