நியூயார்க், ஜூன் 29–
உலக அளவில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அதன் 169 இலக்குகளில் 17% மட்டுமே அடைய முடியும் என ஐநா சபை எச்சரித்தது.
உலகத் தலைவர்கள் 2015 ஆம் ஆண்டில் உலகளாவிய வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவது முதல் பாலின சமத்துவத்தை அடைவது வரையிலான 17 பரந்த அளவிலான வளர்ச்சி இலக்குகளை ஏற்றுக் கொண்டனர். மேலும் தசாப்தத்தின் இறுதிக்குள் 169 குறிப்பிட்ட இலக்குகளை எட்ட வேண்டும். ‘உலகம் தோல்வியடைந்து வருவதையே இது காட்டுகிறது’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வெளியிட்டுள்ள ஆண்டறியில் கூறி உள்ளார். மேலும் அதில் கூறியிருப்பதாவது:–
‘ஏறக்குறைய பாதி இலக்குகள் குறைந்தபட்ச அல்லது மிதமான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. மறுபக்கம் மூன்றில் ஒரு பங்கு ஸ்தம்பித்துள்ளது. வெறும் 17% மட்டுமே அடையப்பட வேண்டிய பாதையில் உள்ளது. அமைதியைப் பாதுகாப்பதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும், சர்வதேச நிதியை ஊக்குவிப்பதிலும் நாம் தோல்வியடைந்திருப்பது வளர்ச்சியைக் தடுக்கிறது.
பாலின சமத்துவத்துக்கு 176 ஆண்டு
பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை, உலகம் தொடர்ந்து பின்தங்கியுள்ளது. ஐந்தில் ஒரு பெண் இன்னும் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. பல பெண்களுக்கு அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து முடிவெடுக்க உரிமை இல்லை. தற்போது நிர்வாகப் பதவிகளில் இருக்கும் ஆண்களுக்கு இணையான நிலையைப் பெண்கள் அடைய 176 ஆண்டுகள் ஆகும்.
ஆனால், புதுப்பிக்கத்தக்க வகையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உலகளாவிய திறன் கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆண்டுதோறும் 8.1% ஆக விரிவடைந்து வருகிறது. 3 தசாப்தங்களில் (30 ஆண்டுகள்) 20.8 மில்லியன் எய்ட்ஸ் தொடர்பான இறப்புகளைத் தடுத்துள்ளது. புதிய மலேரியா தடுப்பூசிகள் வெளியிடப்படுவது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும். பெரும்பாலான நாடுகளில் உள்ள பெண்கள் இப்போது கல்வியில் ஆண்களுக்கு இணையான நிலையை அடைகின்றனர். ஆனால் நிலையான வளர்ச்சிக்கு வேகம் மற்றும் அளவு மிகவும் மெதுவாக உள்ளது.
காசாவில் இருந்து உக்ரைன் , சூடான் மற்றும் அதற்கு அப்பால் உள்ள போர்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும், ‘அழிவு மற்றும் இயற்கை பேரிடர்களுக்கான செலவினங்களை மக்கள் மற்றும் அமைதிக்காக முதலீடு செய்வதில் அனைத்து நாடுகளும் முன் வர வேண்டும்.