செய்திகள்

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி: மீண்டும் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

இம்ரான் கான் வேட்பாளர்கள் அதிக அளவு வென்றும் ஆட்சி அமைக்க முடியாத நிலை

இஸ்லாமாபாத், பிப். 21–

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் அங்கு கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி தவிக்கும் நிலையில், கடந்த 8 ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும் 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த 70 தொகுதிகளை தவிர்த்து 266 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க இருந்த நிலையில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. மேலும் இம்ரான் கான் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டனர்.

அதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலால்வால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) இடையே கடும் போட்டி நடந்தது.

கூட்டணி ஆட்சி

இறுதியில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்கள் அதிக அளவாக 93 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் கட்சியினர் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிலால்வால் பூட்டோவின் பிபிபி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதுதவிர கராச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும். இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த உருது மொழி பேசும் மக்களின் முட்டாஹிதா குவாமி இயக்கம் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க 133 தொகுதிகளை வெல்ல வேண்டும். இருப்பினும் பாகிஸ்தானில் யாருக்கும் ஆட்சியமைக்க தேவையான அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நவாஸ் ஷெரீப், பிலாவால் பூட்டோ கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்து, கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:–

பாகிஸ்தானின் எங்கள் கட்சிகள் இணைந்து, கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. மீண்டும் பிரதமராக பிஎம்எல்-என் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்க உள்ளார். அதேவேளையில் பிபிபி கட்சியின் துணை தலைவரான ஆசீப் ஜர்தாரி நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். நாட்டில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எங்கள் கூட்டணிக்கு உள்ளது என்றனர்.

இம்ரான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வென்றும், அவர்களை ஒருங்கிணைத்து கூட்டணி ஆட்சியை அமைக்க முடியவில்லை என, சிறையிலுள்ள இம்ரான் கான் வருந்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *