செய்திகள்

‘நீட்’ தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்

8 மாநில முதலமைச்சர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூன்.29-

‘நீட்’ தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற 8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி, இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநில முதலமைச்சர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கல்வியின் எதிர்காலம் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்களின் வாழ்நாள் விருப்பங்கள் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினை குறித்து உங்களின் கவனத்துக்கு கொண்டு வரவே தாம் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீட் தேர்வின்போது நடந்த முறைகேடுகள் குறித்த சமீபத்திய பல்வேறு செய்திகள், தேசிய தேர்வு முகமையின் பலவீனங்களை வெளிப்படுத்துகிறது.

நீட் தேர்வை எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளையும் சிதறடித்துள்ளது. நீட் தேர்வை அதன் தொடக்கத்திலிருந்தே நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை மேல்நிலைத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்றும், தனி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சட்டசபையில் தீர்மானம்

‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளத் தேவையான மிக அதிகமான பயிற்சிக் கட்டணங்களை செலவிட முடியாத கிராமப்புற மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மருத்துவக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலேயே நாங்கள் தொடர்ந்து ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறோம். அந்தவகையில், தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் பிளஸ்–2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வழங்கக் கோரியும் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை கருத்தில் கொண்டு, தேசிய அளவில் ‘நீட்’ முறையை கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும்.

ஆகவே, இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தையும், தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த, உங்கள் மாநில சட்டசபையிலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கும் கடிதம்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று கோரி முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:–

மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முறையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள் என்றும், தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்த சமீபத்திய செய்திகள் நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக கடினமாக உழைக்கும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துள்ளதாகவும், கிராமப்புற ஏழை எளிய இளைஞர்கள் மருத்துவம் பயிலவேண்டும் என்ற கனவையும் இந்தத் தேர்வுமுறை தடுக்கிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை எதிர்கட்சித் தலைவரின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் தாங்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும், இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள், மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *