சென்னை, ஜூலை 1–
சென்னையில் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் தினசரி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மோசமான வானிலை போன்ற காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுவதோ அல்லது வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடுவதோ வழக்கம்.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து டெல்லி, சீரடி, ஐதராபாத்துக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் 8 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஷீரடியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ஷீரடிக்கு இயக்கப்படும் 2 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து ஐதராபாத் மற்றும் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 2 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினர். இதனால் பயணிகள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.