யாரும் சாராயம் குடிக்காதீர்கள் என்று வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி,ஜூன் 21–-
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் கண்ணீருடன் சோகத்தில் இருந்த ஒரு பெண்ணை அரவணைத்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 40 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் இன்னும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கள்ளக்குறிச்சிக்கு வந்தார்.
தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்த அவர், அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், விஜய்யின் காலில் விழுவதற்கு சென்றார். அவரை தடுத்த விஜய், கண்ணீருடன் சோகத்தில் இருந்த அந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறினார். அப்போது வேண்டுகோளாக சொல்கிறேன், யாரும் மது, சாராயம் குடிக்காதீர்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை எங்களது தமிழக வெற்றிக்கழகத்தினர் செய்வார்கள் என்று அங்கிருந்தவர்களிடம் விஜய் கூறினார். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.